முதற்கண் ,மாதா ,பிதா, குரு தெய்வம் என்று நம் தமிழ் நமக்கு உணர்த்தி வரும் வரிசையில் மூன்றாவது தெய்வமான குரு எனப்படும் ,நம்மை பயிற்றுவித்த ஆசிரியர்கட்கு டாக்டர் .ராதாகிருஷ்ணன் வழி நின்று வாழ்த்துக்கள் உரித்தாகுக.
திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது வாழ்க்கை பயணத்தை ஆசிரியராகத் தொடங்கி நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த நல்லதொரு பண்பாளர். அன்றைக்கு திண்ணைப் பள்ளிகளும் ,
ஆங்கிலேயர் ஆரம்பித்த பள்ளிகளும் வழக்கத்தில் இருந்த காலம் அது.நம் கையிலும் சுதந்திரம் இல்லை . இப்படி ஒரு நிலையில் சத்தமில்லாமல் இளைய தலைமுறையினருக்கு அறிவுடன் சேர்த்து வாழும் முறையையும், வேண்டுவன போதிக்கும் அஸ்திரம் ஆசிரியர் கையில்தான் உள்ளது என்று தெளிவாகப் புரிந்து செயல்பட்ட உன்னத மனிதர். தனது பதவி உயர்ந்த போழ்தும் ஒருவன் தனது ஆசிரியர் பொறுப்புகளை மறந்திடலாகாது என்று உணர்த்தவே தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடும்படிச் செய்த பெருந்தகையாளர்.
நான் எனது பள்ளிப் பருவத்தில் ,ஜனாதிபதி மாளிகைக்கு எழுதி அனுப்பி பெற்றுக்கொண்ட இவரது படத்தை பத்திரம் பண்ணி வைத்துக்கொண்ட அனுபவத்தை பெருமையுடன் நினைவு கொள்கிறேன் . இன்றைய வாழ்க்கையில் கல்வி நிலையை எண்ணிப்பார்க்கும் போழ்து மனதில் ஒரு நெருடல் உண்டாகிறது .வேண்டும் கல்வி, பணம் அடிப்படையில் கிடைக்கிறது என்பது உண்மை. படிப்போரும் நுழைவுதேர்வு,மதிப்பெண் இவற்றில் மட்டுமே கவனம் செலுத்த சம்பாத்தியம் எந்தக்கல்வியில் அதிகம் என்று எடைபோடும் பண்பு பெற்றோரிடம் இருக்க பள்ளி நிர்வாகமோ சொல்லித் தருவதில் பணம் பார்ப்பதாய் இருக்க அதற்கு அரசாங்கமும் துணை போக நல்லாசிரியார்களின் நிலை தர்மசங்கடமே. இருந்த போழ்தும் அவர்கள் மனம் தளராது பெருந்தகை ராதா கிருஷ்ணன் வழி நின்று கடமை யாற்றுவர் என்று நம்புவோமாக.
உயர்திரு. Dr .ராதாகிருஷ்ணன்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்
நேரு, காமராஜர் , ராஜாஜி இவர்களுடன் துணை நின்ற சமகாலத்தவர் ,
சிறந்ததொரு அரசியல் பண்பாளர்.
வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!

No comments:
Post a Comment